Friday, June 23, 2017

வெளியுலகத்திற்கு மகளை அழைத்துச்செல்லுதல்..! #நிஷாமன்சூர்

#நிஷாமன்சூர்
முதன்முதலாக பள்ளியில் தவறிவிழுந்து
ரத்தம் கொப்பளித்த சிராய்ப்புடன் வீடடையும் மகள்
உதடுபிதுக்கி அழத் துவங்குகிறாள்
காயத்தின் வலியைவிட
பதைபதைத்து ஓடிவந்து தூக்கிவிடும்
கரங்களற்ற பள்ளியின் வெறுமை
அதிகம் வலித்திருக்கிறது அவளுக்கு
நாம் அவளை இறுகக் கட்டியணைத்துக் கொள்கிறோம்

ஆயிரமாயிரம் முத்தங்களை அழுத்தமாகப் பதிக்கிறோம்
காயத்தின் மேல் மென்மையாக ஊதி விடுகிறோம்
பூப்போல அள்ளிச்சென்று மெத்தையில் படுக்கவைக்கிறோம்
சதா சீண்டிக்கொண்டிருக்கும் அண்ணன்
ஏஸியை உயிர்ப்பித்துக் கால்களைப் பிடித்துவிடுகிறான்
கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அக்கா
நெற்றியை மென்மையாய் தடவி விடுகிறாள்
குழந்தைக்குப் பிடித்தமான சாக்லெட் வகைகளை
பாட்டி எடுத்து வருகிறார்
செல்பேசியை அணைத்துவிட்ட தகப்பன் மடியில் மகளைத் தாங்குகிறான்
"அந்த ஸ்கூலுக்கே போ மாட்டம்மா" என்றழும் மகளிடம்
"வேண்டாண்டா செல்லம் நம்ம வேற சூப்பர் ஸ்கூல் போய்க்கலாம்" என்கிறான்
அழுகை மெல்லச் சிணுங்கலாகி "அச்சுக்கிரீம்" கேட்கிறது
நான்கு விதமான ஐஸ்க்ரீம் வகைகளுடன்
குளிர்ச்சி அறையினுள் பரவுகிறது
"அடே அச்சுக்குட்டியோட வலி குடுகுடுன்னு ஓடிப் போய்டுச்சு" என்று விரல்வித்தை காட்டுகிறார் தாய்
"ம்கும் ம்கும்" ஒலியுடன் சிரிப்படக்கி முகம் மூடும் மகளை கிச்சுக்கிச்சு மூட்டி
"ஐ அச்சும்மா சிரிக்கறாங்க" என்கிறான் அண்ணன்
"மியாவ் மியாவ் பூனைக்குட்டி மோசக்காரப் பூனைக்குட்டி" என்று வேண்டுமென்றே பிழையாகப் பாடும் தகப்பனை நோக்கி
"மீசைக்காரப் பூனைக்குட்டிம்பா" ஆசிரியையின் கண்டிப்புடன் திருத்துகிறாள்.
"அச்சச்சோ ஸாரி மேம்" என்று கைகட்டி வாய்பொத்தி தலையில் கொட்டு வைத்துக்கொள்ளும் தகப்பனைக் கண்டு
முறுவலித்து
அடுத்த வரியில் இணைந்து கொள்கிறாள்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வீடு பூரிக்கிறது
நேசத்தின் தென்றல் காயத்தை வருடுகிறது
நிராதரவின் வலிகளை அரவணைப்பு ஆற்றுகிறது
"அச்சும்மா நாளைக்கு அழாம ஸ்கூலுக்குப் போய்டுவாங்க" குரலுக்கு
அப்படியொன்றும் மறுப்பு வராதது கண்டு
ஆசுவாசம் கொண்டு நிம்மதியடைகிறது.
#அன்புமகள்_அஸ்ஃபியாவுக்கு

நிஷா மன்சூர்
 #புனித  மண்ணிலிருந்து தாய் மண்ணிற்கு

No comments: