Wednesday, June 28, 2017

இந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார மாற்றங்களும்


Abu Haashima 
புதிய நாகரீகங்களும் தோன்றின.
அப்போது இந்தியா ஒரே நாடாக இல்லை.
பல நூற்றுக்கணக்கான நாடுகளாகத்தான் இருந்தது.
தமிழ்நாடே சேர சோழ பாண்டிய நாடுகளாக பிரிந்து கிடந்தது.
ஆன்மீகச் செல்வர்களால் இங்கே இஸ்லாம் பரவுவதற்கு முன்னரே
அரபு நாட்டு வணிகர்களால் தமிழகத்தோடு அவர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்தது.
அதனால் அவர்களின் உணவு கலாச்சாரமும்
இங்கே அறிமுகமானது.
முஸ்லிம்கள் எண்ணிக்கை இங்கே அதிகரித்தபோது
கல்வி , கலை , கலாச்சாரம் , கட்டிடம் போன்ற துறைகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது.
உணவு பழக்க வழக்கங்களில் மிகப்பெரிய புரட்சியே ஏற்பட்டது.

மொகலாய உணவுகள் இங்கே பரவலாக அறிமுகமானது.
" சர்பத் " என்ற பானத்தை அறிமுகம் செய்தவர்களே முஸ்லிம்கள்தான்.
புரோட்டா , இடியாப்பம் , பாலாடை , மாவு ரொட்டி , தந்தூரி ரொட்டி போன்ற பதார்த்தங்களை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்களே.
இங்கே மக்கள் எல்லாவிதமான மாமிச உணவுகளையும் உண்ணக் கூடியவர்களாக இருந்தாலும் அதை வித விதமான ருசியோடு சமைக்க கற்றுத் தந்தவர்களும் முஸ்லிம்கள்தான்.
பிரியாணியை இந்தியாவுக்கு தந்தவர்களும்
பலவிதமான இனிப்புப் பண்டங்களை தந்தவர்களும் முஸ்லிம்கள்.
தமிழக முஸ்லிம்கள் உணவில் ஊற்றும் குழம்பை ஆணம் என்றழைத்தார்கள்.
காலை உணவை " பசியாறல் " என்றார்கள்.
இட்டிலியும் தோசையும் சாம்பாரும் தமிழர்களின் விருப்ப உணவுகளாக
இருப்பதைப்போல மாவு ரொட்டியும் இடியாப்பமும் பரோட்டாவும்
தந்தூரி ரொட்டியும் முஸ்லிம்களின் விருப்ப உணவுகளாக இருந்தன.
தமிழர்களும் இந்த உணவு பழக்கத்தை விரும்பியே ஏற்றுக் கொண்டார்கள்.
பிரியாணியிலும் பல வகைகள் இருக்கின்றன்.
ஆம்பூர் பிரியாணி
தலப்பாக்கட்டு பிரியாணி
கோட்டாறு பிரியாணி என்று பல ரகம்.
சுவையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
முஸ்லிம்கள் மட்டுமே ரசித்து ருசித்து அனுபவித்து வந்த இந்த இந்த சுவையான
உணவு வகைகளை எல்லா மக்களும் அனுபவிக்க முஸ்லிம்கள் ஆங்காங்கே ஹோட்டல்களை ஆரம்பித்தார்கள்.
சென்னையில் புஹாரி ஹோட்டல் ரொம்ப பிரபலம்.
அண்ணாசாலை சங்கம் ஹோட்டலில் ஆட்டுக்கால் பாயாவும் ஆப்பமும்
ரொம்ப பேமஸ் .
புதுப்பேட்டையில் உள்ள தர்பார் ஹோட்டலில் ஈரானியன் உணவு வகைகள் ருசியாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கடைகள் பிரபலமாகத் திகழ்ந்தன.
நாகர்கோயிலில் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே பிரபலமாக இருந்தவை
ஆசாத் ஹோட்டலும் பீப்பிள்ஸ் ஹோட்டலும்.
முஸ்லிம் ஹோட்டல்களில் வேலை பார்த்த மாற்று மதத்தவர்கள்
கொஞ்ச வருஷங்களிலே தனியாக புரோட்டா ஸ்டால்களை ஆரம்பித்து அமோகமாக வியாபாரம் செய்கிறார்கள்.
பிராய்லர் சிக்கன் வந்த பிறகு இந்த கடைகளின் எண்ணிக்கை
கணக்கு வழக்கில்லாமல் பெருகி விட்டது.
கட்டிட தொழிலாளர்கள் முதல் கடின உழைப்பாளிகள்வரை ...
இவர்களின் காலை உணவாக இருப்பது
புரோட்டா சால்னாதான்.
உணவு வகைகள் இப்படியென்றால் ...
முஸ்லிம்கள் செய்யும் பலகாரங்கள் இதைவிட அதிகம்.
பச்சரிசி மாவும் கருப்பட்டியும் கலந்து குமரி மாவட்டத்தில்
தயாராகும் " தொதல் "
கிண்ணத்தப்பம்
வட்டிலப்பம்
சீடை என்ற சுக்கப்பம்
மடக்சான்
முட்டசுர்க்கா போன்ற பலகாரங்கள்
வீடுகளில் நடைபெறும் விஷேசங்களுக்கும் பெருநாட்களுக்கும்
அதிக சுவையூட்டுகின்றன.
இந்த பலகாரங்கள் எந்த ஊர் கண்டுபிடிப்பு என்பதெல்லாம் சும்மா
நேரப்போக்கு விளையாட்டுகள்.
எந்த ஊராக இருந்தாலும் அவற்றை அறிமுகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான் முக்கியச் செய்தி.
அறிஞர் அண்ணா சொன்னார் ...
" இஸ்லாம் இந்த மண்ணுக்கு வந்தபோது
தாயைப் பிரிந்திருந்த குழந்தை
மீண்டும் தன தாயை கண்டபோது வாரியணைத்து மகிழ்ந்ததைப்போல
தமிழர்கள் மகிழ்ந்தார்கள் "
உண்மையும் அதுதான்.
இஸ்லாத்தை ஏற்றவர்கள் உடை உணவு கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.
அவர்கள் ஆன்மீகத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும்
தமிழின் மீது மிகுந்த பற்றுள்ளவர்கள்.
தங்கள் சொந்தங்களான தமிழர்கள்மீது பாசமுள்ளவர்கள்.
அதனால்தான் ...
இன்றுவரை இந்த தமிழ் பூமியில்
ஒருதாய் மக்களாக வாழ்கிறார்கள்.
இந்த சகோதரத்துவம் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே
நல்லோர்களின் ஆசை.


Abu Haashima 

No comments: